அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடைகோரி மீண்டும் வழக்கு... அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை...
அதிமுக ஒருங்கிணைப்பாளார் தேர்தலுக்கு எதிராக மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு உட்கட்சி தேர்தல் வரும் 7ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மறுநாளான 8ம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் எனவும், தேர்தல் முடிவுகள் அன்று மாலையே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து , ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல், மற்றும் வேட்புமனு பரிசீலனையும் முடிந்துவிட்டது.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக உறுப்பினரான ஜெயச்சந்திரன் சார்பில் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு இந்த முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது . அதில் இந்த வழக்கை இன்று(06.12.2021) பிற்பகல் 2.15 மணியளவில் அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த வழக்கு குறித்த மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றும், மனு தாக்கல் செய்யப்பட்டு பதிவு நடைமுறைகள் முழுமையாக முடிந்தால் வழக்கை விசாரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி தெரிவித்தார்.
முன்னதாக முன்னாள் எம்.பி., கே. சி. பழனிசாமி, அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடை கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், 'கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பழனிசாமிக்கு வழக்கு தொடர அடிப்படை உரிமை இல்லை என்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டால் தேர்தலை ரத்து செய்ய தயங்க மாட்டேன் என்றும் கூறினார். மேலும் தேர்தலை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்ததுடன், வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி பதிலளிக்குமாறும் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.