"தமிழகத்தை ஒரு பொம்மை முதலமைச்சர் ஆள்கிறார்" - ஈபிஎஸ் கடும் தாக்கு!!
தமிழகத்தை ஒரு பொம்மை முதலமைச்சர் ஆள்கிறார் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என தமிழ்நாட்டிலுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ஒரே கட்டமாக வருகிற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி நடைபெறகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இன்று வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. அதேசமயம் திமுக, அதிமுக என இரு பிரதான கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தற்போது பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் விருதுநகரில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார் . அப்போது பேசிய அவர், "கடந்த 8 மாதங்களாக திமுக அரசு எந்த நல திட்டத்தையும் செய்யவில்லை. திமுக அரசு ஒரு சர்வாதிகார அரசு; அதில் நியாயம் எதிர்பார்க்க முடியாது . தமிழகத்தை ஒரு பொம்மை முதலமைச்சர் ஆள்கிறார். ஒரு மூன்று நான்கு இடங்களில் ஆய்வு செய்வது போல் பாவனை செய்கிறார், சைக்கிள் ஓட்டுகிறார்,டீ குடிக்கிறார், பளு தூக்குகிறார். 8 மாதத்தில் வேறு எந்த புதிய நல திட்டமும் நடைபெறவில்லை. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை " என்றார்.