“9-5 Desk Job போல முதல்வர் பணி... தவெக நிர்வாகிகளிடம் இருந்துதான் பெண்களை காப்பாற்ற வேண்டும்”- இபிஎஸ்
9-5 Desk Job போல முதல்வர் பணியை பார்க்கும் இன்றைய முதலமைச்சர், அந்த 9-5 நேரத்திலாவது சட்டம் ஒழுங்கைக் காப்பது குறித்து எதாவது பணியை செய்தாரா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக தவெக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. குற்றச் செயல்கள் நடைபெறுவதில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், கடந்த 1 மாதமாக நடப்பதை எல்லாம் பார்த்தால், தமிழக மக்களை, குறிப்பாக பெண்களை, இன்றைய ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும் போல! அந்த அளவிற்கு சொந்த கட்சி நிர்வாகிகள் பல குற்றங்களை, குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை ஒரு முதல்வராகவோ, கட்சித் தலைவராகவோ இன்றைய பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் என்ன செய்தார்?
9-5 Desk Job போல முதல்வர் பணியை பார்க்கும் இன்றைய முதலமைச்சர், அந்த 9-5 நேரத்திலாவது சட்டம் ஒழுங்கைக் காப்பது குறித்து எதாவது பணியை செய்தாரா? இதில், இன்றைய முதல்வர் உள்துறையை வேறு ஒரு அமைச்சரிடம் கொடுத்துவிடும் முடிவில் இருப்பதாக சில செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. இளம்பெண் பாலியல் வழக்கில் கைதாகியுள்ள தவெக நிர்வாகி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

