டிச.7 அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்.. - தலைமைக் கழகம் அறிவிப்பு..
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 7ஆம் தேதி நடைபெறும் என தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சட்டவிதி 30 பிரிவு இரண்டின் படி கழக அமைப்புகளின் பொதுத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும் என்ற விதிமுறை கேற்ப , கழக ஒருங்கிணைப்பாளர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில், கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி . பொன்னையன் மற்றும் கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முனைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாளையும்(03.12.21) நாளை மறுநாளும் (03.12.21) காலை 10 மணி முதல் மதியம் 3 மரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 .12. 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 .25 மணி அளவில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும், வேட்புமனுக்களை திரும்பப் பெற 6 .12. 2021( திங்கட்கிழமை) கடைசி நாள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 7. 12 .2021 செவ்வாய்க்கிழமை அன்று கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு 8.12. 2021 புதன்கிழமை அன்று காலை 10 மாலை 5 மணிக்குள் அறிவிக்கப்படும் எனவும் தலைமைக்கழகம் அறிவித்திருக்கிறது.