"எம்ஜிஆரின் வரலாற்றைத் திரித்து, தவறாக செய்தி வெளியிட்ட விடியா திமுக அரசு" - ஜெயக்குமார் கண்டனம்!!
எம்ஜிஆர் பற்றிய வரலாற்றைத் திரித்து, தவறாக அரசு செய்தி அறிக்கை வெளியிட்ட விடியா திமுக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கடந்த 16ஆம் தேதி அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், மறைந்த முதலமைச்சர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களைப் பற்றி உண்மைக்கு மாறான பல தகவல்களை அரசின் சார்பாக வெளியிட்டுள்ளதற்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திரைக்கதை ,வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி, மந்திரகுமாரி வாயிலாக தனக்கென்று தனி இடம் பெற்றவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் சினிமாவில் நுழைய முடியாத நிலையில் திரைத்துறையில் இருந்து தனது சொந்த ஊரான திருக்குவளைக்கு ஓடியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்பது வரலாறு.

இதையறிந்த புரட்சித்தலைவர் தனது தமையனார் பெரியவர் அமரர் சக்கரபாணி அவர்களை விட்டு கருணாநிதி அவர்களுக்கு கடிதம் எழுதி மீண்டும் கோவைக்கு வரவழைத்து பட்சிராஜா ஸ்டுடியோவில் மருதநாட்டு இளவரசி படத்திற்கு வசனம் எழுத வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். மருதநாட்டு இளவரசி, மந்திரகுமாரி ஆகிய படங்கள் வருவதற்கு முன்னரே என் தங்கை, மர்மயோகி, சர்வாதிகாரி போன்ற பல வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் கோலோச்சியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அனைத்திற்கும் மேலாக கருணாநிதி எழுதியதாகச் சொல்லப்படும் வசனங்களை எங்களது புரட்சித் தலைவரும், அவரது தம்பி நடிகர் திலகமும் தங்களுடைய படங்களில் உச்சரித்ததால், கருணாநிதி அவருடைய எழுத்துக்கு மரியாதை கிடைத்தது என்பது வரலாறு.

திரையுலகை சேர்ந்த பலருக்கும் தெரிந்த இந்த உண்மைகள், புரட்சித்தலைவரின் பல படங்களுக்கு வசனம் எழுதிய இன்றைய முதல் அமைச்சரின் உறவினர் சொர்ணம் அவர்களும் நன்றாக தெரியும். ஆனால் அவர் இன்று நம்மிடம் இல்லை என்பது தான் இயற்கையின் சதி. இந்த உண்மைகளை மறைத்து வரலாற்றை திருத்தி எழுதிய கோமான்களை என்னவென்று சொல்வது. இனியாவது இந்த விடியா திமுக அரசு தமிழக அரசின் சார்பாக வெளியிடப்படும் அறிக்கைகள் வரலாற்றை திரிக்காமல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றிய வரலாற்றைத் திரித்து தவறாக அரசு செய்தி அறிக்கை வெளியிட்ட விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


