திமுக ஆட்சியில் தமிழகம் அமளி பூங்காவாக மாறியுள்ளது - ஜெயக்குமார் குற்றச்சாட்டு!!
திமுக ஆட்சியில் ஆளுநர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை வேப்பேரியில் காவல் ஆணையர் வளாகத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்திட்டார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் , திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, அராஜகம் ,அட்டூழியம் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது, ஆட்சிக்கு எதிராக கருத்து சொல்லும் சுதந்திரம் கூட இங்கு இல்லை. திமுக ஆட்சியில் ஆளுநர் முதல் காவலர் வரை பாதுகாப்பு இல்லை. காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. இப்படி இருக்கும் போது தனி மனித உரிமை, தனி மனித பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விட்டது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சட்டம்-ஒழுங்கு முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. .அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் அமளி பூங்காவாக மாறியுள்ளது. சட்டம் 356ஐ நோக்கி திமுக அரசு சென்று கொண்டிருக்கிறது. லாக்கப் மரணங்கள் மூடி மறைக்கப்படுகிறது. விசாரணை கைதி உயிரிழப்பு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். செயற்கை மின்வெட்டு ஏற்படுத்தி தமிழ்நாடு அரசு மத்திய அரசின் மேல் பழி போடுகிறது " என்றார்.