ஒரு ஆண்டுக்கு முன்பே பதவி காலாவதியானது எப்படி? ஈபிஎஸ் தரப்புக்கு நீதிமன்றம் கேள்வி!!
ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் 5 ஆண்டுகள் இருக்கும்போது எப்படி ஒரு ஆண்டுக்கு முன்னரே காலாவதி ஆனது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம், வைரமுத்து தொடர்ந்த வழக்குகள் மீதான விசாரணை இரண்டாவது நாளாக நடைபெறுகிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பிலோ, 2432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளனர், மற்ற கட்சிகள் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது; அதிமுகவில் தான் உள்கட்சி தேர்தல் ஜனநாயகபூர்வமாக நடத்தப்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் கட்சியை வழி நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளனர் எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கியே செல்கின்றன.ஒருவரின் விருப்பத்தை பார்க்காமல் மொத்த கட்சியின் நலனை பார்க்க வேண்டும் என்றது.
அத்துடன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரு பதவிகளும் காலாவதியானதால் அதிமுக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களுடைய கோரிக்கையை ஏற்று ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்பட்டது என்றும் ஈபிஎஸ் தரப்பு விளக்கம் அளித்தது. ஆனால் நீதிமன்றமோ, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்போது, ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதியானது? என்று ஈபிஎஸ் தரப்புக்கு கேள்வி எழுப்பியுள்ளது . ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைமுறைகளுக்கு கடந்த 2021ல் நடந்த பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை . இதன் காரணமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் கோரிக்கை ஏற்கப்பட்டால், பெரும்பான்மையான உறுப்பினர்களின் முடிவுக்கு எதிரானதாகி விடும். கட்சிக்கு எதிரான ஓபிஎஸ் - இன் நடத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானது; ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்றும் ஈபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் அவரது நடத்தை பற்றி பேச வேண்டாம். இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாதது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.