எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் மரியாதை!!
அதிமுகவின் 50ஆவது ஆண்டு பொன் விழா இன்று கொண்டாடப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர், 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். எம்ஜிஆரால் வழி நடத்தப்பட்டு வந்த இந்த கட்சி அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா வசம் சென்றது. ஜெயலலிதா இறந்த பிறகு தற்போது அக்கட்சியினை எடப்பாடி பழனிசாமியும் , பன்னீர்செல்வமும் இயக்கி வருகின்றனர். அதே சமயம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தான்தான் என்று சசிகலாவும் சூளுரைத்து வருகிறார்.
இந்நிலையில் அதிமுக பொன்விழாவையொட்டி சென்னை ராயப்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் அதிமுக கொடி ஏற்றினர். அத்துடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் பொன்விழா மலரை வெளியிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டமும் நடைபெற்றது. நடப்பாண்டு முழுவதும் அதிமுக பொன்விழா கொண்டாடப்படும் என்றும் இனி அதிமுக தலைமை அலுவலகம் எம்ஜிஆர் மாளிகை என்று அழைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றினார் சசிகலா . அதிமுக பொன்விழாவையொட்டி எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் கழக பொதுச்செயலாளர் என்று சசிகலா பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.