1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து 1000 கோடி ரூபாய் அமுக்கிய அந்த_தியாகி_யார்?- பரபரப்பு போஸ்டர்

 
s

"அந்த தியாகி யார்?" என விழுப்புரம் மற்றும் வேலூரில் அதிமுக தரப்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Image

டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது,  டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது, கொள்முதலை  குறைத்து காட்டியது, பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அந்த அறிக்கையில் கூறியுள்ளது.  இந்த முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது.

Image

இந்நிலையில், விழுப்புரம் மற்றும் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பொது இடங்களில், 1000 ரூபாய் கொடுத்தது போல் கொடுத்து 1000 கோடி அமுக்கிய "அந்த தியாகி யார்?" என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் வேலூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ளது. மதுபான துறையில் ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ள நிலையில் திமுக அரசை விமர்சிக்கும் வகையில் இத்தகைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.