ஜனவரி மாதம் முதல் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன- ராஜேந்திர பாலாஜி

 
ராஜேந்திர பாலாஜி ராஜேந்திர பாலாஜி

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் பாலாஜி நகரிலுள்ள விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த அதிமுக( வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ) நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய ராஜேந்திரபாலாஜி, “அதிமுகவின் 2 கோடி தொண்டர்களின் ஏகோபித்த தலைவராக எடப்பாடி பழனிச்சாமி திகழ்கிறார். எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்துப் பேசுபவர்கள் எல்லோரும் அதிமுகவை காட்டிக் கொடுக்கிறார்கள். இயக்கத்தை காட்டிக்கொடுத்து விட்டு மாற்றானோடு சேர்ந்து கூத்தடிக்கும் வேலையை செய்பவர்களை எப்படி அதிமுக தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? குறை இருந்தால் எடுத்துச் சொல்லலாம், இயக்கத்தையே குழி தோண்டி புதைக்க நினைப்பது எப்படி சரியாக இருக்கும்? 2 கோடி தொண்டர்களும் ஏற்றுக் கொண்ட தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார், அவர் எடுக்கும் முடிவுதான் அதிமுகவின் குரல். ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, உழைக்கின்ற அதிமுக தொண்டர்களின் குரலாக  எடப்பாடி பழனிசாமி உள்ளார், ஆகவே அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்

இயக்கத்தில் எத்தனையோ பேர் நீக்கப்பட்டும் சேர்க்கப்பட்டும் உள்ளார்கள், கட்சியில் நீக்குவது, சேர்ப்பது எடப்பாடி பழனிச்சாமியின் கடமை. கட்சித் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு தலைவராக வரக்கூடியவர்கள் தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இயக்கத்தை குழி தோண்டி புதைக்கும் பணியை செய்தால் பொதுச் செயலாளர் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவு 100 சதவீதம் உண்மையான முடிவு, எடப்பாடி பழனிச்சாமியை என் தொண்டர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதிமுக கூட்டணிக்கு ஜனவரியில் எதிர்பாராத பல கட்சிகள் வர உள்ளது,  அதை இப்போதே தெரிவித்துவிட்டால் சுவாரஸ்யம் இருக்காது. ஆகவே எடப்பாடி பழனிச்சாமி சரியான நேரத்தில் சரியான முடிவுகளை அறிவித்து எதிரிகளை திக்கு முக்காட வைக்க உள்ளார். அதிமுக பாஜக கூட்டணி 220க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். அதற்கு சரியான களத்தை தேர்ந்தெடுத்து விட்டார், பாதையும் தேர்வாகிவிட்டது,  பயணமும் துவங்கிவிட்டது. நம்மை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் கிடையாது” என்றார்.