"பொங்கல் பரிசில் ரூ.500 கோடி ஊழல்.. சிபிஐ விசாரணை வேணும்" - கோர்ட் படியேறிய அதிமுக!
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். எப்போதும் அரிசி, சர்க்கரை, பருப்பு வெல்லம், கரும்பு ஆகிய பொருட்களுடன் ரொக்கப்பணமும் அளிக்கப்படும். ஆனால் இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக பொங்கல் திருநாளில் மக்கள் பலகாரங்கள் செய்வதற்கேற்ப சமையல் பொருட்கள் வழங்கப்பட்டன. மொத்தமாக 21 மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் தான் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. பெரும்பாலான மக்கள் தரமான பொருட்கள் கிடைத்ததாகக் கூறினார்கள்.
ஆனால் கடைசியாக விநியோகிக்கப்பட்ட பொருட்களில் தான் எக்கச்சக்கமான புகார்கள் எழுந்தன. வெல்லம் உருகிப் போனது, புளியில் பல்லி விழுந்தது, முந்திரி, திராட்சை அளவு குறைந்தது என பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசை சரமாரியாக விமர்சித்தன. மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி ரூ.500 கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். தரமற்ற பொங்கல் பரிசு வழங்கியது முதலமைச்சர் ஸ்டாலினையும் வேதனையடைய செய்துள்ளது. இதுதொடர்பாக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.
மேலும் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்து இனிவரும் டெண்டரில் நுழைய தடை விதிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இச்சூழலில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "21 மளிகை பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், பல ரேஷன் கடைகளில் குறைந்த அளவிலான பொருட்களே வழங்கப்பட்டன. தரம் குறைந்த மளிகை பொருட்களை கொள்முதல் செய்து அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். தொகுப்பில் பல்லி மற்றும் ஊசி போன்ற அபாயகரமான பொருட்கள் இருந்தன.
பல பாக்கெட்களில் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்தது. இவை குறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. கரும்பு கொள்முதலுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில், விவசாயிகளுக்கு முழுமையாக கொடுக்காமல், 50 சதவீத தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநில அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளார்கள். ரூ.500 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் வருவதால் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
கரும்பு கொள்முதலுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில், விவசாயிகளுக்கு முழுமையாக கொடுக்காமல், 50 சதவீத தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.