உச்சகட்ட அதிருப்தியில் செங்கோட்டையன்- ஈபிஎஸ் சமரச முயற்சி
அதிமுகவில் உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதிருப்தியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்திருந்தார்.
அதிமுகவில் தவிர்க்க முடியாத சக்தியாகவும், முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய இடத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் தொட்டு இருந்தவருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக.வில் தலைமை நிலைய செயலாளர், அமைப்பு செயலாளர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் இருந்தவர். தற்போது, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார்.
அதிமுகவில் இவரது கட்டுப்பாட்டில் கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானிசாகர் ஆகிய 3 தொகுதிகள் உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கும், கோபி முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் மகனுக்கும் செங்கோட்டையனின் கவனத்திற்கு தெரியாமலேயே மாநில நிர்வாகிகள் பொறுப்பை எடப்பாடி பழனிச்சாமி வழங்கியதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் இந்த நியமனம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கும் அதிருப்திக்கும் ஆளான கே.ஏ.செங்கோட்டையன் சில தினங்களுக்கு முன்பாக அன்னூரில் நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கான பாராட்டு விழாவை புறக்கணித்தார். மேலும் சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் தவிர்த்தார்.

இதன் மூலம் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலும், மூத்த நிர்வாகி கே.ஏ செங்கோட்டையனின் அதிருப்தியும் வெளிச்சத்திற்கு வந்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனிடையே கே.ஏ.செங்கோட்டையனை சமரசம் செய்யும் முயற்சியில் எடப்பாடி தரப்பினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அவசரமாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கோவைக்கு புறப்பட்டு சென்ற செங்கோட்டையனை சில நிர்வாகிகள் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்தியூர் கோபிசெட்டிபாளையம் பவானிசாகர், சத்தியமங்கலம் பகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை கே.ஏ.செங்கோட்டையன் இன்று காலை தனது இல்லத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
அதிருப்தியில் உள்ள கே.ஏ.செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் அழைப்பு விடுத்தது பெரும் பரபரப்பையும் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தியது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்தியூர், கோபி பகுதியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள் மற்றும் அதிமுக பேரூர் கிளைக் கழக செயலாளர்கள் கோபி அடுத்த குள்ளம்பாளையத்தில் செங்கோட்டையன் இல்லத்தில் கூடியுள்ளனர்.


