தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் - செங்கோட்டையன் திடீர் மனமாற்றம்
நான் தொண்டனாகவே இருந்து பணியாற்ற விரும்புகிறேன், அதிமுக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு பணியாற்றுகிறேன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் ஆசனூரில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “என்னை பொருத்தவரை நான் சாதாரண தொண்டனாகவே இருந்து பணியாற்ற விரும்புகிறேன், அதிமுக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு பணியாற்றுகிறேன். திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 48 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. நான் அமைச்சராக பணியாற்றிய துறைகளில் நான் மட்டுமே ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதிமுக ஆட்சி அமைந்த உடன் தொழிலாளர்கள் நலன் காக்கப்படும். 2026 இல் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்து போட்டியிடுகின்ற நமக்கு 200 இடங்கள் நிச்சயமாக கிடைக்கும்” என்றார்.


