திமுகவினர் அராஜகம் ; அதிமுகவினர் கைது - வேலுமணி வைத்த கோரிக்கை!!

 
velumani

வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்று  எஸ்.பி. வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வரும் சூழலில்  திமுக மற்றும் அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். கடந்த மார்ச் 4ஆம் தேதி கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.

tn

இந்த சூழலில் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட மறைமுக தேர்தல்  62 இடங்களில் நடைபெற்று வரும் நிலையில் வெள்ளலூர் பேரூராட்சியில் மீண்டும் தலைவர் தேர்வுக்கான தேர்தலின் போது அதிமுக , திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது . அப்போது போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டதையடுத்து , தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர் . 

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், "நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 8 வார்டுகளில் மக்களின் அமோக ஆதரவோடு அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றால் அதில் அதிமுகவே வெற்றி பெரும். அதிமுக வின் இந்த வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, தேர்தலை நிறுத்த சட்ட விரோதமாக தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

tn

தேர்தல் நடைபெறும் வளாகத்தில் திமுகவினரின் அராஜக போக்கை கண்டித்து, ஜனநாயகத்தை காப்பாற்ற முயன்ற அதிமுகவினர் கைது செய்யப்பட்டிருக்கிறர்கள். அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
 வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அராஜக போக்கை பயன்படுத்தி தேர்தலை மீண்டும் நிறுத்த திமுக முயற்சித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். காவல்துறையும், மாநில தேர்தல் ஆணையமும் நியாயமாக செயல்பட்டு தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.