"சிதம்பரம் கோவில், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகு பல தவறுகள் நடந்திருக்கு”- அமைச்சர் சேகர் பாபு..!

 
சேகர்பாபு சேகர்பாபு

"திருவண்ணாமலை தீபத் திருவிழாக்கு இந்த ஆண்டு 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் திருக்கோயிலில் புதிய வெள்ளி திருத்தேர் திருப்பணிகள் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள  கங்காதீஸ்வரர் திருக்கோயிலில்  குடமுழுக்கிற்கான  திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  ஆய்வு செய்தார். அப்போது  செய்தியாளர்களை சந்தித்த அவர், “காளிகாம்பாள் திருக்கோயிலில் கோவில் உள்ள தேரில் வெள்ளி தகடு பொருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அடுத்த ஆண்டு மார்ச் 1 அன்று  இந்த வெள்ளி தேர் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வரும். 

உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டும் அனைத்து பணிகளையும் விரைவுப்படுத்தி செயலாக்கத்துக்கு கொண்டு வந்து  நீதிமன்ற பாராட்டுகளை பெரும் துறையாக இந்து சமய அறநிலையத் துறை உள்ளது.  கடந்த ஆண்டு 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திருவண்ணாமலை தீபத் திருவிழாக்கு வருகை தந்தார்கள், இந்த ஆண்டு 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.  

சிதம்பரம் கனகசபை

சிதம்பரம் கோவில், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகு பல தவறுகள் நடந்திருக்கின்றன, அனுமதி இல்லாமல் பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது, இதையெல்லாம் நீதிமன்றம் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.  

நாளொரு மேனியும்  பொழுதொரு வண்ணமுமாக, தினம் தினம் ஏதேனும் ஒரு வகையில் பரபரப்பை உண்டாக்க வேண்டும்.  தன்னை நோக்கி ஊடகங்கள் வர வேண்டும் என்ற நினைப்பில் ஆளுநர் பல செயல்களை செய்து கொண்டிருக்கிறார். அவரது கருத்துக்களுக்கு, பதிலடி கொடுப்பதில் முதல்வர் பின்வாங்க மாட்டார். அதற்கு உண்டான நடவடிக்கைகளிலும் தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியாக இருப்பார்; ஆளுநர் பேச்சு அன்றோடு போச்சு” என்றார்.