மார்ச் 01ம் தேதி அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம்

 
admk office

அதிமுக தலைமைக்கழக பேச்சாளர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் மார்ச் 1ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. 
 
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் மேலான ஆணைப்படி, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெறச் செய்திடும் வகையில், தேர்தல் பரப்புரையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து "தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம்" வருகின்ற 1.3.2024 - வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், சென்னை எழும்பூரில் உள்ள "ஓட்டல் இம்பிரியல் சிராஜ் மஹாலில்" (எழும்பூர் ரயில் நிலையம் அருகில்) நடைபெற உள்ளது. 

admk

தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், சிறந்த மேடைப் பேச்சாளர்கள் பங்கேற்று, "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா, 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி ஆகியோரது கழக ஆட்சிகளில், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்ட பல்வேறு முத்தான திட்டங்களையும், விடியா திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் இன்னல்களையும்; விடியா அரசு மக்களுக்கு இழைத்து வரும் பல்வேறு துரோகங்களையும்" பட்டிதொட்டியெங்கும் வாழும் மக்களிடம், தேர்தல் பரப்புரை மூலம் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை வழங்க உள்ளார்கள். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில், தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.