வ.உ. சிதம்பரனார் அவர்களின் 152-ஆவது பிறந்த நாள் - அதிமுக சார்பில் மரியாதை
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 152-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது திருஉருவச் சிலைக்கு அதிமுக சார்பில் வருகிற 05ம் தேதி மரியாதை செலுத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தவரும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என பன்முகத் தன்மை பெற்றவருமான, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 152-ஆவது பிறந்த நாளான 5.9.2023 – செவ்வாய் கிழமை காலை 10.30 மணியளவில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுடைய நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு சண்முகநாதன் ஆகியோர் இணைந்து, இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.