அதிமுக தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு..!
Updated: Dec 10, 2025, 11:44 IST1765347253134
அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியதும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் பேசும்போது, "கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், கட்சியின் சட்டதிட்ட விதிகளின்படி, தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு செய்யப்படுகிறார். அவர் இந்த கூட்டத்தை நடத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த இந்த தீர்மானத்தை கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார். அதனைத் தொடர்ந்து மேடையில் இருந்த கே.பி.முனுசாமி, எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து கே.பி.முனுசாமி தலைமையில் அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, பொதுக்குழு கூட்டம் தொடங்கும் முன்பாக நுழைவு வாயிலில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி வேனில் உள்ளே சென்ற நிலையில், ஒரே நேரத்தில் அதிமுகவினர் உள்ளே செல்ல முற்பட்டனர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருசிலர் தடுமாறி கீழே விழுந்து பிறகு, எழுந்து சென்றனர். இந்த நிகழ்வால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


