முதல்வரின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது - அதிமுக புகார்

 
Erode East

இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை குறித்து முதலமைச்சர் அறிவித்தது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என கூறி அதிமுக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.  இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த தொகுதிக்குட்பட்ட சம்பத் நகரில் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். இதனை தொடர்ந்து காந்தி சிலை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். 

mk stalin

பிரசாரத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:   கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு. சம்பத் நகரில், ஈ.வி.கே.எஸ். சம்பத் மகனுக்கு வாக்கு சேகரித்து கலைஞர் மகன் வந்துள்ளேன். திமுகவின் அடித்தளமே ஈரோடு தான், மகனின் கடமையை செய்து முடிக்க தந்தை வந்துள்ளார். குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும். இவ்வாறு கூறினார். 

இந்நிலையில், இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை குறித்து முதலமைச்சர் அறிவித்தது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என கூறி அதிமுக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரை சந்தித்து, அதிமுகவை சேர்ந்த இன்பதுரை புகார் மனு அளித்தார்.