ஈ.பி.எஸ் தலைமையில் வருகிற 20ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வருகிற 20ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு அதில், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வருகிற 20ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 20ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.