மாவட்ட வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் - அதிமுக அறிவிப்பு!!
நகர வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் தேர்தல்களை நடத்துவதற்கான, மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்களை அதிமுக தலைமை கழகம் நியமித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "அதிமுக கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் ,கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் ,தென்காசி வடக்கு மாவட்டம் ,தென்காசி தெற்கு மாவட்டம், விருதுநகர் கிழக்கு மாவட்டம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம் ,அரியலூர் ,மதுரை மாநகர், சேலம் புறநகர் மாவட்டம், சேலம் மாநகர் மாவட்டம் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், நகரங்களுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட வட்ட கழக நிர்வாகிகள் ஆகிய உறுப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல்கள் தேர்தல்களை வருகின்ற 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடத்துவதற்கு மட்டும் மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, பேரூராட்சி, நகரம் மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.
மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் கழக அமைப்பு தேர்தல்களை நடத்துவதற்கான வாக்காளர்பட்டியல், மினிட் புத்தகம், விண்ணப்ப படிவம், ரசீது புத்தகம் ,வெற்றி படிவம் முதலானவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்களிடமிருந்து பெற்று அவற்றை ஒன்றிய ,நகர ,பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் தேர்தல் ஆணையாளர்களிடம் வழங்கி கழக சட்ட விதிமுறைகளின்படி, கழக அமைப்புத் தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கழக அமைப்புத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெறும் வகையில் ,மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளருக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.