அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு: இபிஎஸ் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்..!!

 
eps eps


அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக்கோரி  இபிஎஸ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2022ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என விதி இருக்கும்பட்சத்தில், எடப்பாடி பழனிசாமியோ அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால் அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 

இதனிடையே அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும்,  அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேநேரம் சூரியகுமார் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே இல்லை என்றும், அவர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரியும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

admk office

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சூரியமூர்த்தி தரப்பில்,  அதிமுக கட்சி விதிகளின்படி கட்சியின் பொதுச்செயலாளர் , கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டுமெனவும், பழனிசாமிக்கு உறுப்பினர் அட்டையை வழங்க அதிகாரமே இல்லை என்றும் வாதிடப்பட்டது.  
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிற விதிகளின் படி பொதுச்செயலாளர் தேர்வானதாக தெரிவிக்கவில்லை என்றும்,  பொதுக்குழு தீர்மானம் மூலம் பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்ததற்கு எதிரான வழக்கு செல்லும் என்று கூறினார். அத்துடன் வழக்கை நிராகரிக்ககோரி  எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.