அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி பேச்சு நடக்கவில்லை - கே.பி.முனுசாமி திட்டவட்டம்

 
kp munusamy

அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி பேச்சு நடக்கவில்லை என அதிமுக துணை பொதுச்செயாலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், இதன் எதிரொலியாக பாஜக-அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டடது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனிமேல் ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை எனவும் அதிமுக அறிவித்தது.. நாடாளுமன்றம் மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். கூட்டணி முறிவு தொடர்பாக அவர் தேசிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ஜனதா துணை தலைவர் வி.பி.துரைசாமி அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறினார். அண்ணாமலை தமிழகத்தில் இல்லாத நிலையில், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வி.பி.துரைசாமி கூறியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி பேச்சு நடக்கவில்லை என முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை பொதுச்செயாலாளருமான கே.பி.முனுசாமி கூறியுள்ளார். வி.பி.துரைசாமியின் கருத்தை கே.பி.முனுசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.