என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தலைமையில் உண்ணாவிரத போராட்டம்!

 
AIADMK

என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழி தேவன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்.எல்.சி. நிறுவனம் 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, கடலூர் மாவட்டம் மேல் வளையமாதேவி பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதற்காக நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில், ஜேசிபி இயந்திரங்களை இறக்கி நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கியது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதனால் அப்பகுதியில் போராட்டம் வெடித்தது. என்எல்சி நிர்வாகத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  நெய்வேலியில் என்எல்சிக்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் நேற்று முன் தினம் முற்றுகை போராட்டம் நடத்திய நிலையில், அது வன்முறையாக மாறியது. இருப்பினும் என்.எல்.சி நிறுவனம்  கால்வாய் அமைக்கு பணிகளை தொடர்ந்து வருகிறது. 

என்.எல்.சி.

இதனிடையே என்.எல்.சி. நிறுவனத்தின் 2வது விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழி தேவன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில்,  புவனகிரி எம்.எல்.ஏ. அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்று வருகிறது.