“5000 ரூபாய் வாங்கிவிட்டு உன் வாயில் மக்கள் மண்ணை அள்ளி வைப்பார்கள்”- ஸ்டாலினை வசைப்பாடிய அதிமுக எம்.எல்.ஏ
மகளிர் உரிமைத் தொகை சிறப்பு நிதி வழங்கப்பட்டதை கொச்சையாக விமர்சித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த கிருஷ்ண முரளி. இவர் நேற்று கடையநல்லூரில் (திமுக அரசை கண்டித்து) நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் மகளிர்க்கு சிறப்பு நிதியாக முதல்வர் 5000 ரூபாய் வழங்கியதை கடுமையாக விமர்சித்தார். மேலும் உரிமைத் தொகை பெறும் பெண்களை தரக்குறைவாக சிறுக்கி என்ற வார்த்தையை சொல்லி கொச்சைப்படுத்தினார். உரிமைத் தொகை வழங்கிய முதல்வரை அவன் இவன் என்று ஒருமையில் பேசியதும் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
இதுதொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி பேசியதாவது, “100 நாள் வேலை 100 நாளைக்கு 125 நாளாக உயர்த்தப்பட்டுள்ளது, பிரச்சனை இல்லை அதில் உள்ள பெயர் தான் பிரச்சனை என்கிறார் ஸ்டாலின். நாங்களும் காந்தி பெயரை மீண்டும் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். பேர மாத்தியதில் உனக்கு என்ன பேதி எடுத்துள்ளது .? 100 நாளைக்கு 125 நாளாக அறிவித்த திட்டத்தை அமல்படுத்த துப்பு இல்லாத ஸ்டாலினுக்கு, 5000 ரூபாய் ஒவ்வொரு அக்கவுண்டில் போட்டு விட்டால் அனைத்து பெண்களும் நமக்கு ஓட்டு போட்டு விடுவார்கள் என்ற எண்ணம் அவருக்கு உள்ளது. கூடுதல் வட்டிக்கு ஆசைப்பட்டு வட்டிக்கடைக்காரனிடம் பத்தாயிரம் ரூபாய் மொத்தமாக கொடுத்துவிட்டு மாதம் மாதம் வட்டி தருவான் என எண்ணி கொடுப்பதை போன்ற கதை தான். முதல் மூன்று மாதம் முறையாக வட்டியை கொடுப்பான், அதற்குப் பிறகு மொத்த ரூபாயையும் எடுத்துக்கொண்டு ஓடி விடுவான்.
அதை போல் தான் இந்த திமுக அரசு கொடுத்துள்ள 5000 ரூபாய் கோடை காலத்தில் ஜூஸ் வாங்கி குடிக்க சிறப்பு நிதி 2000 ரூபாய் மொத்தம் 5000 ரூபாய் வாங்கிக் கொண்டு நமக்கே ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் அவருக்கு உள்ளது. 5000 ரூபாய் வாங்கிவிட்டு உன் வாயில் பொதுமக்கள் மண்ணை அள்ளி வைப்பார்கள், என்பது உனக்கு தெரியாது” என்றார்.

