அதிமுகவினர் அமளி.. பேரவையில் இருந்து வெளிநடப்பு..
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
3 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியது. அப்போது எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது இருக்கை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நீண்ட விளக்கம் அவையில் கொடுத்துள்ளேன் என பாநாயகர் அப்பாவு விளக்கமளித்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்கின்ற இருக்கையை, மரபு அடிப்படையில், பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்தி விளக்கம் அளித்த போதும் அதனை ஏற்காமல், அதிமுக உறுப்பினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.