செந்தில் பாலாஜியின் உடல்நிலையை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக்குழு இன்று சென்னை வருகை

 
 செந்தில் பாலாஜியை முதல்வர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவக்குழு இன்று சென்னை வருகிறது.

சட்டவிரோத பணமோசடி வழக்கில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட அஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில், மூன்று முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதை அடுத்து, செந்தில் பாலாஜிக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யவும் ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.  இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவரின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றமும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து, நேற்று இரவே காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை ஆய்வு செய்ய எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக்குழு இன்று சென்னை வருகிறது. காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதனை செய்ய அமலாக்கத்துறை கோரிய நிலையில் மத்திய மருத்துவக்குழு இன்று வர உள்ளது. 3 முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதாக ஓமந்தூரார் மருத்துவமனை கூறியிருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்த எய்ம்ஸ் குழு சென்னை வருகிறது.