அஜித்குமார் கொலை வழக்கு- 5 காவலர்களுக்கு 2 நாள் சிபிஐ காவல்

 
திருப்புவனம் அஜித் திருப்புவனம் அஜித்

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு 5 தனிப்படை காவலர்களையும் சிபிஐ அதிகாரிகள் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமாரை ஜூன் 28ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான வழக்கில் விசாரணை நடத்தும்போது 5 தனிப்படை காவலர்களால் தாக்குதலுக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் சிபிஐ அதிகாரிகள் 22 ஆவது நாளாக விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் 5 தனிப்படை காவலர்களுக்கும் ஆகஸ்ட் -13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே மதுரை மத்திய சிறையில் உள்ள 5 தனிப்படை காவலர்களையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது இன்று மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி முன்பாக விசாரணைக்கு வந்தபோது 5 தனிப்படை காவலர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 5 பேரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிபதியிடம் சிபிஐ தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட்டனர். பின்னர் 2 நாட்கள் சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு 5 காவலர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி செல்வபாண்டி 5 தனிப்படை காவலர்களையும் 2 நாட்கள் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் விசாரணை முடித்துவிட்டு நாளை மாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் எனவும், விசாரணையின் போது எந்தவித துன்புறுத்தலில் ஈடுபடுத்தக்கூடாது , மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது மருத்துவ சான்றுடன் ஆஜர்படுத்த வேண்டும் உத்தரவிட்டார். இதனையடுத்து 5 தனிப்படை காவலர்களும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சிபிஐ அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துசென்றனர். தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் 5 தனிப்படை காவலர்களையும் மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவுள்ளனர்.