தமிழ்த்தாய் வாழ்த்து ”மாநில பாடல்”, பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

 
தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழர்களின் வாழ்வாக  அவர்தம் உணர்வுக்கு ஒளியாக  திகழ்வது தமிழ்மொழி. அத்தகைய ஒப்புயர்வற்ற உயர்தனிச் செம்மொழியாம் இலக்கண, இலக்கிய வளங்கள் நிறைந்த தமிழ் மொழியை தாயாகப் போற்றும் தமிழர், தம் அன்னையை வாழ்த்திப் பாட பொதுவான பாடல் ஒன்றை ஏற்கவேண்டும் என்ற உள்ளக்கிடக்கையை ஒரு நூற்றாண்டுக்கும் முன்னதாகவே வெளிப்படுத்தியுள்ளனர்.  இதனை தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், இலக்கிய அமைப்புகளும், தமிழ் சங்கங்களும் ,பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து

 தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய ’நீராரும் கடலுடுத்த’ எனும் பாடல் பாட வேண்டும் என்னும் கோரிக்கை 1913ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

 இந்தப் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக 1914ம் ஆண்டு முதல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் பாடி வந்துள்ளார்கள். மேலும் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் பாடி வந்துள்ளார்கள்.  மேலும் கரந்தை தமிழ்ச் சங்கத்தை தாய்ச் சங்கமாக கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் உர்வான சங்கங்களிலும் தொடக்கப்பட்டலாக இப்பாடல் பாடப்பட்டது.

இதனை தமிழக அரசின் பாடலாக அறிவிக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களுக்கு கரந்தை தமிழ்ச் சங்கத்தினர் கோரிக்கையாக எழுதி அனுப்பி வைத்தார்கள்.  தமிழறிஞர்கள்,  ஆர்வலர்கள்,  பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 1970-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 11ஆம் தேதி அன்று நடந்த அரசு விழாவில் அன்றைய  முதல்வர் கலைஞர் அவர்கள் பேசும் போது,  இனி அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து இருக்கும்.  ’நீராருங் கடலுடுத்த’  எனும் மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய பாடலின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அமையும் என்று அறிவித்தார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து அரசாணை

அதன்படியே தமிழ்தாய் வாழ்த்து பாடலை 23 நவம்பர் 1970 ஆம் ஆண்டு அன்று முத்தமிழ் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்த அன்றைய தமிழக அரசு தமிழ் தாய் வாழ்த்தாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அவ்வரசாணையை தொடர்ந்து தமிழ்நாட்டின் அரசு விழாக்களில் கல்வி நிலையங்களில் பொது நிகழ்ச்சிகளில் பொது நிகழ்ச்சிகளின்போது நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடப் படுவது குறித்து, சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டிய கால சூழ்நிலையை ஒட்டி,  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் மூலம்  தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசை வட்டுகளைக் கொண்டு இசைப்பதை தவிர்த்து,  பயிற்சி பெற்றவர்கள் நிகழ்ச்சியில் பாடவேண்டும் எனவும் சமீபத்தில் ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நேர்வில் அன்னைத் தமிழ் மொழியை போற்றிடும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடுவதை ஒருங்கிணைத்து நெறிப்படுத்த வேண்டிய நிலையில் சில  வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  1.  மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய ”நீராருங் கடலுத்த” வரிகளை கொண்ட தமிழ் தாய் வாழ்த்து பாடல் தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 55 வினாடிகளில், முல்லைப்பாணி ராகத்தில் ( மோகன ராகம் )  பாடப்பட  வேண்டும்.தமிழ்த்தாய் வாழ்த்து
  2. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள்  பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின்  நிகழ்ச்சிகளிலும்,  நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ் தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படவேண்டும்.
  3. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்.
  4. மாற்றுத் திறனாளிகளுக்கு இவ்வரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  5. பொது நிகழ்ச்சிகளில் ’தமிழ்த்தாய் வாழ்த்து’ இசை வட்டுக்களை கொண்ட இசைப்பதைத் தவிர்த்து,  பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும்.
  6. அன்னைத் தமிழின் பெருமையை உலகறிய செய்வதிலும்,  இளம் தலைமுறையினருக்கு கொண்டு போய் சேர்ப்பதிலும்,  பொதுமக்களும் தனியார் அமைப்புகளும் பெரும் பங்காற்ற முடியும் என்பதால்,  தமிழ்நாட்டில் நடைபெறும்   தனியார் அமைப்புகள் நடத்திடும்  கலை, இலக்கிய மற்றும் பொது நிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.