அமித் ஷா தலையிட்டதால் செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்தி வைப்பு?
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, நீதிமன்ற காவலில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்குவதாக நேற்று இரவு ஆளுநர் அலுவலகம் தரப்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் ஆளுநரின் நடவடிக்கையை கடுமையாக சாடி வருகின்றனர். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்கிய உத்தரவு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பேசியதாகவும், இதனையடுத்தே ஆளுநர் அந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமை வழக்கறிஞரின் கருத்துக்களை பெறும் படி அமித் ஷா ஆளுநரை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.