அமித்ஷா என்னை பற்றி பேசுகிறார்.. அவர் மகன் எப்படி பிசிசிஐ தலைவரானார்?? - உதயநிதி ஸ்டாலின் பேச்சு..
திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெறும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட- மாநில- மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. இளைஞர் அணியின் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள், துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இளைஞர் அணியின் மீது நம்பிக்கை வைத்து முதலமைச்சர் இந்த வாய்ப்பை நமக்கு வழங்கி இருக்கிறார். அதற்காக மாவட்ட , மாநில, மாநகர நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
நேற்று வந்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்னை பற்றி பேசியிருக்கிறார். என்னை முதலமைச்சர் ஆக்குவது தான் முதலமைச்சருக்கு நோக்கமாக இருப்பது போன்று பேசியிருக்கிறார். மக்களை சந்தித்து சட்டமன்ற உறுப்பினராகி தற்போது அமைச்சராக இருக்கிறேன். அமித்ஷாவின் மகன் எதை வைத்து இந்த நிலைமை அடைந்தார் என்று சொல்ல முடியாமல், இங்கு வந்து என்னை பற்றி இவ்வாறு பேசியிருக்கிறார். அமித்ஷா மகன் நடத்தும் நிறுவனத்தினுடைய மதிப்பு பாஜக ஆட்சிக்கு வரும்போது 2014 ஆம் ஆண்டு 75 லட்சமாக இருந்தது. தற்போது 130 கோடி ரூபாய். இப்போது எப்படி வந்தது இந்த வளர்ச்சி. உங்கள் ( அமித்ஷா) மகன் ஜெய்ஷா எப்படி பிசிசிஐ தலைவரானார்? அவர் எத்தனை மேட்ச் விளையாடி இருக்கிறார்? எவ்வளவு ரன் அடித்திருக்கிறார்? தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சர் இளைஞர் அணியில் இருந்து தான் வந்ததே மிகவும் பெருமைக்குரிய விஷயம். இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெற உள்ளது.” என்று கூறினார்.