தமிழகம் வரும் அமித் ஷா அதிமுகவினரை சந்திக்க மாட்டார் என தகவல்

 
edappadi amit shah

தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிமுகவினரை சந்திக்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது.  அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் நாளை நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா ,வி. கே. சிங் உள்ளிட்டோர்  பங்கேற்கின்றனர்.  இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு சென்னை வருகிறார். சென்னை வரும் அமித்ஷா விமான நிலையத்திலிருந்து பள்ளிக்கரணை செல்கிறார்.  அங்கு தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதன் பின்னர் சென்னை விமான நிலையம் சென்றடைந்து,  அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்கிறார்.  பாஜக  பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதனிடையே தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அதிமுகவினரை அமித் ஷா சந்திக்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அமித் ஷாவை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுவரை இதுவரை நேரம் கேட்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.