"திமுகவின் துரோகத்திற்கு உச்சநீதிமன்றம் போட்ட மருந்து இது..." - தினகரன் சாடல்!!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. பேரறிவாளன் உடல்நிலையை கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழக அரசு பேரறிவாளனின் தொடர் சிகிச்சைக்காக பரோல் வழங்கி வந்த நிலையில் அவருக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.
இந்த விவகாரத்தில் உதவிய தமிழக அரசுக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார் . அதே சமயம் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார் இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்த நிலையில், முன் விடுதலைக்கான நிபந்தனைகளில் வகுப்புவாத , மத மோதல்களில் ஈடுபட்டு கைதானவர்கள் முன் விடுதலை பெற இயலாது என தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டது. குறிப்பாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை இதில் தகர்ந்து விட்டதாக பலரும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏழு தமிழர் விடுதலையில் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது நிம்மதியளிக்கிறது. இதைத்தொடர்ந்து எஞ்சிய ஆறுபேரும் பிணையில் விடுதலை ஆகிவிடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. 'பல ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு தமிழரையும், இஸ்லாமிய சிறைக்கைதிகளையும் ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலை செய்துவிடுவோம்' என்று கூறி மக்களை ஏமாற்றிய தி.மு.க., அவர்கள் இனி எப்போதுமே சிறையிலிருந்து விடுதலையாக முடியாதபடி அரசாணையும் பிறப்பித்தது.தி.மு.க.வின் இந்த துரோகத்திற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மருந்து போடுவதாக அமைந்துள்ளது. தமிழ் உணர்வாளர்களும், சிறுபான்மை மக்களும் தி.மு.க.வின் இரட்டை வேடத்தை முழுமையாக புரிந்துகொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை." என்று பதிவிட்டுள்ளார்.