காவலர் மீது தாக்குதல், காவல்நிலையம் சூறை... சந்தி சிரிக்கும் சட்டம், ஒழுங்கு- டிடிவி தினகரன் கண்டனம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காவல்நிலையத்திற்குள் புகுந்து தலைமைக் காவலர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தபட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்திருக்கும் திமுக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சத்திரப்பட்டி காவல்நிலையத்திற்குள் நேற்று இரவு புகுந்து தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தியதோடு, அங்கிருந்த உபகரணங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் தப்பியோடியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுமூகமான சூழலை உறுதி செய்வதிலும், சட்டம் ஒழுங்கை பேணிக்காணிப்பதிலும் முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டிய காவல் நிலையத்திற்குள்ளாகவே நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதல் சம்பவம் திமுக அரசின் அவல நிலையை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்களில் தொடங்கி சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினர்கள் மீது அடுத்தடுத்து அரங்கேறும் தாக்குதல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடியாததன் விளைவே தற்போது காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.குற்றச்சம்பவங்கள் அரங்கேறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் தமிழகத்தை அமைதிப்பூங்கா என புகழ்ந்ததற்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக பொய் கூறியதற்கும், காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். எனவே, காவல் நிலையத்திற்குள் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கும் புதுப்புது கதைகளை தேடி நேரத்தை வீணடிக்காமல், அந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


