"எனக்கு உடல் நலமில்லை என சிலர் கூறுவது நகைப்பை ஏற்படுத்துகிறது" - முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டை வளப்படுத்த நடந்தது முதலீட்டாளர் மாநாடு; உலகமே வளம் பெற நடப்பது அயலகத் தமிழர் மாநாடு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு நடைபெறும் அயலகத் தமிழர் தின விழாவில் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 218 சர்வதேச தமிழ்ச் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ்ச் சங்கங்கள் பங்கேற்பு; 40க்கும் மேற்பட்ட அயலகத் தமிழர் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அயலகத் தமிழர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசிய போது, தாய் மண்ணிற்கு உங்களை வரவேற்பது மகிழ்ச்சி; முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற பொன்மொழியே தமிழர்கள் கடல் கடந்தும் கோலோச்ச உந்துதலாக இருக்கிறது; அயலகத் தமிழர் நல வாரியம் மூலமாக உங்களின் உடனடி தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன வெளிநாட்டில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ் இணைய கழகம் மூலமாக தமிழ் கற்றுத் தரப்படுகிறது; வெளிநாடுகளில் கைதான தமிழர்களுக்கு அரசு சார்பில் சட்ட உதவி வழங்கப்படுகிறது.
வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் இங்கு முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது; நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்; தமிழ் அன்னையின் குழந்தைகள்; எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதீர்கள்; அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டுக்கு வாருங்கள்; கீழடி, பொருநை, ஆதிச்சநல்லூரை காட்டுங்கள்; தமிழோடு இணைந்திருங்கள்; நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருங்கள். எனக்கு உடல் நலமில்லை என சிலர் கூறுவது நகைப்பை ஏற்படுத்துகிறது; தமிழ்நாடு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது எனக்கு என்ன குறை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.