“தேர்தலுக்கு பிறகு விஜய் நிச்சயம் நடிக்க வருவார்”- நடிகை பரபரப்பு பேச்சு
சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் அனலி. இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது நாயகி மற்றும் தயாரிப்பாளரான சிந்தியா லூர்டே பத்திரிக்கையாளர்களை சந்தித்து அனலி படத்தைப் பற்றியும், தனது சினிமா அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த சந்திப்பில் சிந்தியா லூர்டே பேசும்போது, வர்ணாஷ்ரமம், தினசரி படங்களுக்கு பிறகு அனலி என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். ஆனால் இதில் வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. இது கொஞ்சம் தனித்துவமான இருக்கும்.

90களில் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி மேடம் ஆக்ஷன் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் முதன் முறையாக ஒரு முழுநீள ஆக்ஷன் ஹீரோயினாக நான் நடித்திருக்கிறேன். நாயகர்களே நடிக்க தயங்கும் காட்சிகளிலும் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நானே நடித்திருக்கிறேன். ஆக்ஷன் காட்சிகளில் எல்லாமே ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். இந்த படத்தில் ஹீரோ என்று யாரும் கிடையாது. நிறைய வில்லன்கள் இருக்கிறார்கள். பி.வாசு சார் மகன் சக்தி வாசு தான் இந்த படத்தின் மெயின் வில்லன். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அனலி படம் மூலம் ரீ-எண்ட்ரி ஆகிறார். பிரபல பாலிவுட் நடிகர் கபிர் துஹான் சிங் இன்னொரு வில்லனாக நடித்திருக்கிறார். மலையாள நடிகர் அபிஷேக் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளங்கோ குமரவேல், இனியா, ஜெயசூர்யா, மேத்யூ வர்கீஸ், அசோக் பாண்டியன், ஜென்சன் திவாகர், வினோத் சாகர், பேபி ஷிமாலி, சிவா என பல பிரபல நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

இப்போது வரும் படங்களில் கதையே இருப்பதில்லை. ஆனால் இயக்குனர் தினேஷ் தீனா சொன்ன கதை ஒரு நல்ல அழகான கதை. கடைசி காட்சி வரை விறுவிறுப்பாக் செல்லும், இறுதி காட்சி வரை உங்களை அமர வைக்கும். இறுதி வரை உங்களால் கதையை கணிக்கவே முடியாது. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக பத்தாயிரம் கண்டெயினர்கள் கொண்ட யார்டில் மிக பிரமாண்டமான செட் அமைத்து 30 நாட்கள் அந்த செட்டிலேயே படம் பிடித்திருக்கிறோம். ஒவ்வொரு படத்திலும் நிறைய கற்றுக் கொள்கிறேன். இந்த படத்திலும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என கற்றுக் கொண்டேன். சினிமாவில் எந்த பின்புலமும் இன்றி வந்து சாதிப்பது கஷ்டம். ஒரு தயாரிப்பாளராக நான் நேர்மையாக இருக்கிறேன். எல்லோருக்கும் பேசியபடி சம்பளத்தை தந்திருக்கிறேன். ஷூட்டிங்கிலும் தினசரி பேட்டா முதற்கொண்டு அன்றைக்கே தந்திருக்கிறேன். நான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன், எவ்வளவு சம்பளம் கேட்டாலும் தருவேன் என நினைத்தார்கள். ஆனால் தயாரிப்பாளராக நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். அந்த விஷயத்துல நான் பக்கா லோக்கல்.
அனலி ஜனவரி 2ஆம் தேதி வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் படத்தை தமிழகம் முழுக்க வெளியிடுகிறது. அடுத்த வாரமே ஜனநாயகன், பராசக்தி படங்கள் ரிலீஸ் ஆனாலும் என்னுடைய படமும் நிச்சயம் பொங்கல் சீசனிலும் தியேட்டர்களில் ஓடும். தளபதி விஜய் உடன் இணைந்து நடிப்பேன். என் தயாரிப்பில் அவர் நிச்சயம் நடிப்பார். அவர் சினிமாவை விட்டு போய் விட்டார் என சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், நிச்சயம் 2 வருடத்திற்குள் அவர் சினிமாவில் மீண்டும் நடிக்க வருவார், அதை நீங்கள் பார்ப்பீர்கள் என்றார்.


