‘ஸ்ரீமதி மரணத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும்’ - பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்..
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோரை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் விளக்கமளித்த நிலையில், இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் . கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு நீதிக் கேட்டு கடந்த மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட 322 க்கும் மேற்பட்டோரை இதுவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். ஸ்ரீமதி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நேற்று மாணவி ஸ்ரீமதியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்திற்குச் சென்று அவரது பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீமதியின் படத்திற்கு அஞ்சலி செலுத்திய அவர், ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பெற்றோரிடம் கேட்டறிந்தார். மேலும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் எனவும் , ஸ்ரீமதி மரணத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றும் கூறினார். அப்போது மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச வைத்தார். பின்னர் முதல்வரும் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து செல்வி தெரிவித்ததாவது, “ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி திமுக எம்.எல்.ஏ கணேசன் ஆகியோர் வீட்டுக்கு வந்து எங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் எனக்கு முதல்வர் ஸ்டாலின் உடன் பேசுமாறு போன் போட்டு கொடுத்தார். முதல்வரிடம் எங்களின் மனக்குமுறலை உங்களிடம் நேரில் வைத்து கூற வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்றுக் கொண்ட அவர், நீங்கள் என் சகோதரி எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்தித்து உங்கள் கோரிக்கைகளை சொல்லலாம் என்று தெரிவித்தார். ஸ்ரீமதி வழக்கில் நிச்சயம் நீதி கிடைக்கும் என்றும் முதல்வர் கூறினார்” என்று தெரிவித்ததார். தமிழக முதல்வர் ஸ்ரீமதி மரணத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும் என உறுதியளித்தது அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் அளித்துள்ளது. மேலும் ஸ்ரீமதியின் பெற்றோர் விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது