துபாய் தீ விபத்தில் 2 தமிழர்கள் பலி - அன்புமணி ராமதாஸ் இரங்கல்

 
anbumani

துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தமிழர்கள் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

துபாயில் உள்ள அடுக்குமாடி வளாகத்தில் நேற்று முன் தினம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இரண்டு தமிழகர்கள் உட்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த இரண்டு தமிழர்களும்,  கள்ளக்குறிச்சி மாவட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம், குடு என்கிற முகமது ரபிக் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கும் இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், துபாய் அடுக்குமாடி வளாகத்தில்  நேற்று முன்நாள் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  கள்ளக்குறிச்சி மாவட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம், குடு என்கிற முகமது ரபிக்  ஆகிய இரு தமிழர்கள்  உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த இமாம் காசீம், குடு என்கிற முகமது ரபிக் ஆகிய இரு தமிழர்களின் உடல்களை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள்  மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.