இது அநீதி.. பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.. ஆசிரியர் தேர்வு வாரியத்தை வறுத்தெடுத்த அன்புமணி..

 
அன்புமணி ராமதாஸ்

தேசிய தகுதித் தேர்வு நடைபெறும் அதேநாளில், ஆசிரியர்  தேர்வு வாரியமும் தேர்வை நடத்துவது  போட்டியாளர்களின் வாய்ப்பை பறிக்கும் செயல் என பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வில் (NET) கணிதப் பாடத் தேர்வு பிப்ரவரி  16-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,   அதேநாளில், அதே கணிதப் பாடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

டிஆர்பி

தேசியத் தகுதித் தேர்விலும்,  ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்விலும்  கணிதப்பாடத் தேர்வை எழுதுபவர்கள் ஒரே போட்டியாளர்கள் தான். இரு தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்பட்டால், ஏதேனும் ஒரு  தேர்வை எழுதும் வாய்ப்பு போட்டியாளர்களிடமிருந்து பறிக்கப்படும். இது அநீதியானது. தேசியத் தகுதித் தேர்வுக்கான அட்டவணை ஜனவரி 17-ஆம் தேதியே வெளியிடப்பட்டு விட்டது.  ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை பிப்ரவரி 3-ஆம் தேதி தான் வெளியானது.

ஆசிரியர் தேர்வு வாரியம்

தேசியத் தகுதித் தேர்வு நாளில், ஆசிரியர் தேர்வு வாரியம் கணிதப் பாடத் தேர்வை அறிவித்தது தான் குழப்பங்களுக்கு காரணம் ஆகும். தேர்வு அட்டவணை தயாரிப்பது, முடிவுகளை வெளியிடுவது, இட ஒதுக்கீடு வழங்குவது என அனைத்திலும் ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பின்றி நடந்து கொள்கிறது. இரு வகை தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்க வசதியாக கணிதப் பாடத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்தி வைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.