ஆன்லைன் சூதாட்டம் ; ஒரு வாரத்திற்குள் அவசர சட்டம் - அன்புமணி கோரிக்கை!!

 
Online Rummy - Anbumani Ramadoss

ஆன்லைன் சூதாட்டம் விவகாரத்தில் ஒரு வாரத்திற்குள் அவசர சட்டத்தை பிறப்பிக்க அன்புமணி  கோரிக்கை விடுத்துள்ளார்.

anbumani

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக அளவில் பணத்தை இழந்த சென்னை மணலியை  சேர்ந்த பெயிண்டர் நடராஜன் என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  ஆன்லைனில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் சுமையின் காரணமாக ,  மன உளைச்சலுக்கு ஆளான அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் .இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை மணலியைச் சேர்ந்த நடராஜ் என்ற வண்ணம் பூசும் தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நடராஜின் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 10 மாதங்களில் நிகழ்ந்துள்ள 24-ஆவது தற்கொலை. ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த மூன்றாவது உயிரிழப்பு. 



ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதையே இது காட்டுகிறது!ஆன்லைன் சூதாட்டங்கள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டியது எவ்வளவு அவசியம்,  இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடும், கோரிக்கைகளும் எவ்வளவு நியாயமானவை என்பதற்கு இந்த நிகழ்வுகளை விட சரியான எடுத்துக்காட்டுகள் தேவையில்லை! ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிறப்பிப்பது குறித்து பரிந்துரைக்க வல்லுனர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.  அக்குழுவின் அறிக்கையை திட்டமிட்டபடி ஒரு வாரத்திற்குள் பெற்று உடனடியாக அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.