ஊழலில் சிக்கிய அதிகாரி பணியிட மாற்றம்... அன்புமணி கடும் எதிர்ப்பு!!

 
pmk

தமிழக போக்குவரத்து துறை சென்னை துணை ஆணையராக இருந்த நடராஜன் அலுவலகத்தில் கடந்த 14ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது.  இதில் 35 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் அவரது வரவு செலவு கணக்கு ஆகியவற்றை குறிப்பிட்ட டைரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.  இதையடுத்து துணை ஆணையர் நடராஜன் மற்றும்அவரது உதவியாளர் ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.  போக்குவரத்துத்துறை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக ரூ. 5 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்த நிலையில் ,நடராஜன் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல். அவர் நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

tn

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்ட ஊழல் ஒழிப்பு சோதனையில் ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு காரணமான துணை ஆணையர் -1 நடராஜன் எந்த தண்டனையும் இல்லாமல்  நெல்லைக்கு இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.  பணத்துடன் சிக்கிய அதிகாரி குறித்து விசாரித்த போது, அவர் பதவி உயர்வு வழங்க 7 பேரிடமிருந்து தலா ரூ. 5 லட்சம் வசூலித்தது உறுதியாகியுள்ளது. பதவி உயர்வுக்காக மேலும் 35 பேரிடமிருந்து ரூ.1.75 கோடி வசூலித்ததும் தெரியவந்துள்ளது. அவர் மீது காவல்துறை வழக்கும் பதிவு செய்திருக்கிறது!

tn

சம்பந்தப்பட்ட அதிகாரி 2019-ஆம் ஆண்டில் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஆக இருந்த போது அவரது அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனையிட்டு, ரூ.88 லட்சம் பணத்தை கைப்பற்றியதுடன், வழக்கும் பதிந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அவரது துறையினரே பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர்! கையூட்டு பணத்துடன் சிக்குபவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


ஆனால், எந்த சோதனையும், எந்த கைது நடவடிக்கையும் இல்லாமல் இட மாற்றத்துடன் அந்த ஊழல் அதிகாரி தப்பவிடப்பட்டிருக்கிறார். இது பெரும் அநீதி! ரூ.100 கையூட்டு வாங்கியதற்காக கிராம நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், ரூ. 2.10 கோடி கையூட்டு வாங்கிய அதிகாரி தப்பவிடப்படுகிறார் என்றால், அது ஊழலை ஒழிக்க உதவாது.  ஊழல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதுடன், கைது செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.