"இனி ஆன்லைன் தேர்வு கிடையாது... நேர்ல தான் வரனும்" - அண்ணா பல்கலை. அதிரடி!
"இனி ஆன்லைன் தேர்வு கிடையாது... நேர்ல தான் வரனும்" - அண்ணா பல்கலை. அதிரடி!கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலமே வகுப்புகளை நடத்தின. அதேபோல செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாகவே நடந்து, அதன்மூலமே முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இதில் பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் அண்ணா பல்கலைக்கழகமும் அடங்கும். மற்ற பல்கலைக்கழகங்களில் இந்த நடைமுறை எவ்வித குழப்பமின்றி நடைபெற்றது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் முடிவுகளில் சில குளறுபடிகள் ஏற்பட்டன.
இதையடுத்து புதிதாகப் பொறுப்பேற்ற திமுக அரசு, இப்பிரச்சினைகளைக் களையும் பொருட்டு சில சீர்த்திருத்தங்களை மேற்கொண்டது. தற்போது அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இச்சூழலில் கடந்த ஜூலை மாதம் முதல் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. இப்போது பரவல் முற்றிலும் கட்டுக்குள் வந்துள்ளது. இதையொட்டி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் திறக்கப்பட்டுவிட்டன.
இதனிடையே பணி நியமன போட்டி தேர்வுகள், உயர் கல்வி நுழைவு தேர்வுகள் போன்றவை நேரடியாக நடத்தப்படுத்துவதால், அதைப் பின்பற்றி கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்த மாநில உயர்கல்வித் துறை உத்தரவிட்டது. அதன்படி இறுதியாண்டு, தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுமே (internal, practical) இனி நேரடியாக நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தேர்வுகள் நடைபெறும் எனவும் கூறியுள்ளது.