80 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்காமல் நிறுத்திவைப்பு - அண்ணா பல்கலை. நடவடிக்கை..
தமிழகத்தில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் படிப்புகள் தொடங்குவதற்கும், அங்கீகாரம் தொடர்வதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பிக்கின்றன. அதனை பரிசீலனை செய்து அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கும். அந்தவகையில் இந்த ஆண்டு விண்ணப்பித்திருந்த கல்லூரிகளில், 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்திருக்கிறது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அண்ணா பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த 80 பொறியியல் கல்லூரிகளையும் நேரில் ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. போதிய உள்கட்டமைப்பு வசதியின்றி செயல்படும் கல்லூரிகள் உடனடியாக அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மாணவர்கள், பேராசிரியர்கள் எண்ணிக்கை, ஆய்வகங்கள், நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பின்னர் உள்கட்டமைப்பு வசதி சரியில்லாத கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றவும் அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருக்கிறது.