#Breaking அவதூறு வழக்கில் ஆஜரானார் அண்ணாமலை
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக தலைவர்களின் சொத்து பட்டியல் என்ற சில விவரங்களை வெளியிட்டு இருந்தார். இதில் திமுக அமைச்சர்களான எ.வ.வேலு, கே.என். நேரு, பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணி , அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் எம்.பி.க்கள் கனிமொழி ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி, டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன் ,துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், மு. க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் ,கலாநிதி மாறன் உள்ளிட்ட 12 பேரின் சொத்து பட்டியல் வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக திமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர். அத்துடன் சொத்து பட்டியல் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டி .ஆர். பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். தன்னை பற்றி அடிப்படை ஆதாரம் இன்றி அவதூறு பரப்புவதாக அண்ணாமலை மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார் .அத்துடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சிறை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜராகி உள்ளார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறியுள்ளார் என்று டி ஆர் பாலு குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அண்ணாமலை நேரில் ஆஜராகியுள்ளார். இதன் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.