பாஜக தேர்தல் பொறுப்பாளர்களுடன் அண்ணாமலை நாளை ஆலோசனை
வருகிற மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெல்ல பாஜக இலக்கு நிர்ணயித்து உள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டிவரும் நிலையில் அதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டது. ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்த நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொறுப்பாளர்களை நியமித்தார். இவர்களுடன் கடந்த மாதம் 8ம் தேதி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் பாஜக தேர்தல் பொறுப்பாளர்களுடன் தொகுதி வாரியாக நாளை ஆலோசனையை தொடங்குகிறார் மாநில தலைவர் அண்ணாமலை. கூட்டணி, தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து ஏற்கனவே பணிகள் தீவிரமடைந்துள்ளது. தொகுதி வாரியாக தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகளுடன் நாளை சந்திப்பு நடத்துகிறார்.