"உங்களுக்கு தெரிந்து தான் தப்பு நடந்ததா?" - முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!
தமிழ்நாட்டின் பராமரிப்பில் இருக்கும் முல்லை பெரியாறு அணை கேரளாவில் உள்ளது. மழை எப்போதெல்லாம் அதிகமாக பெய்கிறதோ, அப்போதெல்லாம் அணை உடைய போவதாக கேரளாவில் வதந்தி பரப்பப்படும். இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அதிகபட்சமாக 142 அடி வரை தமிழ்நாடு நீரை தேக்கி கொள்ளலாம்; அதற்கு மேல் சென்றால் நீரை திறந்துவிட வேண்டும். இதன்படி தேனி ஆட்சியர், தமிழ்நாடு அமைச்சர்கள் கேரள பகுதிக்கு நீரை திறப்பது வழக்கம். கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகளும் அமைச்சர்களும் பங்கேற்பார்கள்.
ஆனால் இம்முறை மரபு மீரப்பட்டு, கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் திறந்துவிட்டார்கள். இதுதான் அனைத்து விதமான குழப்பத்திற்கும் காரணமாக அமைந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் அங்கில்லை. உடனே தமிழ்நாடு அரசின் அனுமதி பெறாமல் கேரள அரசு அணையில் நீரை திறந்துவிட்டதாக செய்திகள் வட்டமடித்தன. இதனால் தமிழ்நாட்டு விவசாயிகள், அரசியல்வாதிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து விளக்கமளித்தார் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன்.
"அக் 28 காலை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்ததால் அணையின் இரண்டு மதகுகளைத் திறக்க, மதுரை மண்டல நீர்வளத்துறை முடிவெடுத்து, அன்று காலை தமிழக நீர்வளத்துறைப் பொறியாளர்களால் திறக்கப்பட்டது. இதுகுறித்து, நிலையான வழிகாட்டுதலின்படி கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. மதகுகள் திறக்கப்படும்போது கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சரும் மற்றும் சில அதிகாரிகளும் உடனிருந்து பார்வையிட்டார்கள். ஆனால் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்” என விளக்கினார். தற்போது இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெரியாறு அணை முதன்முறையாக தமிழக அரசின் அனுமதி பெறாமல் கேரள அரசால் திறக்கப்பட்டுள்ளது. தெரிந்துதான் இது நடந்ததா? அனுமதி பெற்று தான் செய்தனரா? அணையில் நீர்மட்டம் 136 அடியை எட்டும்போது அவசரமாக திறந்துள்ளனர். தமிழக அமைச்சர்கள் எங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளனர். இது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாகக் கூற வேண்டும். தமிழக அரசு அனுமதியின்றி கேரள அரசு தங்கள் விருப்பம்போல் திறந்துள்ளனர். இதை பார்க்கும் போது திமுக அரசு தமிழக உரிமையை விட்டுக்கொடுக்க தயாராகிவிட்டதா என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும்” என்றார்.