நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படகுப் போக்குவரத்து சேவையை புதுப்பித்ததற்காக, பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படகுப் போக்குவரத்து சேவையை புதுப்பித்ததற்காக, பிரதமர் மோடிக்கு, தமிழக மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதன் தொடக்க விழாவில் பேசிய நமது மாண்புமிகு பாரதப் பிரதமர், சங்க கால தமிழ் இலக்கியங்களான பட்டினப்பாலை மற்றும் மணிமேகலை நூல்களில், இந்தியா மற்றும் இலங்கை நாகரிக இரட்டை நாடுகளுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்துச் சேவைகள் குறிப்பிடப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டிப் பேசினார்.
மேலும், ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே, படகுப் போக்குவரத்து சேவை விரைவில் தொடங்கப்படும் என்றும் நமது மாண்புமிகு பிரதமர் தெரிவித்தார். நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் படகுப் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்ததற்காக, மாண்புமிகு துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.