மார்ச்-ல் 6 நாட்கள் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் - தம்பிதுரை அறிவிப்பு..
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் மார்ச் மாதத்தில் 6 நாட்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் மாதம் 5,6,7 மற்றும் 10,11,12 ஆகிய 6 நாட்கள் பிறந்தநநாள் விழா பொதுக்கூட்டங்கள், கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும், கட்சியின் அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
மார்ச் 5ம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். மார்ச் மாதம் 10,11 மற்றும் 12ம் தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டும்.
மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களை, கட்சியின் பிற பிரிவுகளுடன் இணைந்து சிறப்பாக நடத்திட வேண்டும். கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..