2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் : டிஎன்பிஎஸ்சி தலைவர்..!

 
1 1

டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியது: “குருப்-4 தேர்வில் வெவ்வேறு அரசு துறைகளிடமிருந்து காலிப்பணியிடங்கள் வந்த வண்ணம் உள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான பணிகள் ஒன்றரை மாதங்களுக்கு மேல் செல்லும். எனவே, அதுவரையிலான காலகட்டத்தில் வரப்பெறும் காலிப்பணியிடங்களை சேர்க்க முடியும்.

எனவே, குருப்-4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்கப்படும். அதேபோல், ஒருங்கிணைந்த குருப்-2 மற்றும் குருப்-2 ஏ தேர்விலும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. முந்தைய ஆண்டு தேர்வுகளின்போது இரண்டு அல்லது 3 ஆண்டுகளுக்குரிய காலிப்பணியிடங்கள் சேர்த்து நிரப்பப்பட்டதால் காலியிடங்கள் அதிகம் இருந்ததுபோல் தோன்றியிருக்கும். தற்போது அந்தந்த ஆண்டுக்குரிய காலியிடங்கள் அதே ஆண்டில் நிரப்பப்படுவதால் காலியிடங்கள் குறைவாக இருப்பது போன்று தெரியலாம்.

பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்ப அரசு முடிவுசெய்துள்ளது. இது தொடர்பாக அரசிடமிருந்து உத்தரவு வந்ததும் அந்த பதவிகளில் உள்ள காலியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு பதவிக்கும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கல்வித்தகுதிக்கு ஏற்ப அவை குரூப்-4 தேர்வு மூலமாகவோ அல்லது குரூப்-2 அல்லது குரூப் 2 ஏ தேர்வு மூலமாகவே நிரப்பப்படும். 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் தேர்வு கால அட்டவணை வெளியிடப்படும். அதில் குருப்-1, குருப்-2 மற்றும் 2 ஏ, குருப்-4 தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெறும்” என்று அவர் கூறினார்.