மேகதாது அணை திட்ட அறிக்கையை நிராகரிக்கும் வரை அழுத்தம் கொடுங்க.. தமிழக அரசுக்கு டிடிவி கோரிக்கை..

 
ttv


மேகதாது அணையின் திட்ட அறிக்கையை நிராகரிக்கும் வரையில் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மேகதாது அணை கட்டுவது தொடர்பான கர்நாடகா அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கும் வகையில் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகின்றேன். மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் அவர்கள் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமமாகும்.

மேகதாது அணை - ஒகேனக்கல்

மேலும், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய உரிமையை தராததோடு, மழை வெள்ள காலத்தில் மட்டும் எஞ்சிய நீரை திறந்து விடும் கர்நாடகா அரசு, தமிழ்நாட்டின் விவசாயம், குடிநீர் தேவைக்கு போதிய நீரை தராமல் அணைகட்ட நினைப்பது தமிழ்நாடு மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வரும் சூழலில், குறுவை சாகுபடியை காப்பாற்ற முடியுமா என டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையில் உள்ள நிலையில் கர்நாடகா விடுவிக்க வேண்டிய தண்ணீரை காவிரி மேலாண்மை வாரியம் வாயிலாக பெறவும், கர்நாடகா அரசுக்கு எதிராக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்கவும் முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.